அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடஒதுக்கீடு அதிமுகவின் சட்டபோராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றி என்று அதிமுக கூறியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 1980ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி சமூகநீதிக்கான முதல் வெற்றியை எம்.ஜி.ஆர் நிலைநாட்டியதாக கூறியுள்ளனர்.
1993ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 69 சதவீத இடஒதுக்கீட்டை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்க அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளையும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இதரபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும்படி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மத்திய அரசுக்கு பல்வேறு கடிதங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடர்ந்து கடைபிடித்து வந்த சமூகநீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.







