தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி,  தனியார் பள்ளிகளில்…

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி,  தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு) மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.

இந்த இடங்களில் சேரும் மாணவ,  மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக்கட்டணம் செலுத்தும்.  இந்த நிலையில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல், மே 20 ஆம் தேதி வரை  https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள்,  வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
  • எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்,  2021 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
  • ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2019 ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
  • பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் செய்யப்பட்டுள்ளன.  விண்ணப்பப் பதிவு முடிந்ததும் தனியார் பள்ளிகள் தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும்,  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின்,  மே 28 ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.