ஆப்கனிஸ்தானின் காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்தனர்.
காபூலின் வடக்குப் பகுதியில் உள்ள காய்ர் கானா என்ற பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மாலை தொழுகை நடைபெற்று வந்தது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
மசூதிக்குள் குண்டு வெடித்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கன் அரசு, தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.









