காங்கோவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல வீடுகள் மக்கள் மீது இடிந்து விழுந்ததாகவும், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலர் காணாமல்போனதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா