அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக TNPSC, தேர்வாளர்களின் விவரங்களை அளிக்கக் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கடந்த 20ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தமிழ் வழியில் பயின்றவர்களின் விவரங்களை அறிய, தேர்வாளர்களின் விவரங்களை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குரூப் 1 முதல்நிலைத் தேர்வை எழுதியவர்கள் தாங்கள் 1-ம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்ததற்கான சான்று, பிளஸ் 1, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை தேர்வாளர்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஒரு வேளை, தமிழ்வழிக் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு தேர்வு எழுதியவர்கள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவர்கள் வேலை வாய்ப்பில் உரிமை கோர முடியாது.







