அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது மோடி என்ற பெயர் குறித்து சர்சைக்குரிய கருத்துகளை அவர் பேசியதாக கூறப்படுகிறது. .
இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
இதனைத்தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியாக இருப்பதாகவும், அந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும், ராகுல் காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.