தஞ்சையில் கீழஅலங்கம் பகுதியில் உள்ள மதுபான பாரில், மது வாங்கி குடித்து 2 பேர் பலியான சம்பவத்தில், சட்டவிரோத மதுபானம் விற்றதாக நேற்று பாருக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், 4 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. அதற்கு எதிரே உள்ள பாரில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரத்திற்கு முன்பாகவே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அந்த மதுபான கடைக்கு சென்ற தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த 60 வயதான குப்புசாமி மற்றும் 35 வயதான விவேக் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி குடித்துள்ளனர். மதுபானத்தை குடித்ததுமே குப்புசாமி வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குப்புசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விவேக்கும் மயங்கி விழுந்த நிலையில், அவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அண்மையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள மீனவ கிராமத்தில், விஷச் சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில், தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த மதுபான பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உயிரிழந்த இருவரின் உடல் உறுப்புகளில் சயனைடு கலந்திருப்பதற்கான தடயம் இருப்பதாகவும், இது மருத்துவ அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். குடும்ப பிரச்னையால் இருவரும் உயிரை மாய்த்துக்கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூறினர்.
இதுமட்டுமின்றி, மதுபான பாரில் மது வாங்கி குடித்து 2 பேர் பலியான சம்பவத்தில் மதுபானக்கடை மேற்பார்வையாளர் முருகானந்தம் விற்பனையாளர்கள் திருநாவுக்கரசு, சத்யசீலன், பாலு ஆகிய 4 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், டாஸ்மாக் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா