போஸ்பரா பகுதியில் சுற்றி வரும் T23 புலி வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் 4 மனிதர்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்டவர்களை கொன்ற T23 புலியை பிடிக்க பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதை அடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். இதனையடுத்து ஆட்கொல்லி புலியை பிடிக்க தமிழகம், கேரளா மாநிலம் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், 8 கால்நடை மருத்துவர்கள், 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள், வனப்பகுதியில் 80க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், அதி நவீன டிரோன் கேமரா மூலம் மசினகுடி வன பகுதியில் தேடியும் யார் கண்ணிலும் சிக்காமல் T23 புலி போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று போஸ் பரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்ததை வனத்து துறையினர் உறுதி செய்து கால்நடை மருத்துவர்களுடன் 4 குழுக்களாக பிரித்து புலியை தீவிரமாக தேடி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று மாலை புலி இருக்கும் இடத்தை உறுதி செய்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க முயன்றனர். அப்போது T23 புலி அடர்ந்த புதர் பகுதிக்குள் மறைந்து கொண்டதால் இன்று மீண்டும் புலியை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டள்ளது என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அறிவித்துள்ளார். T23 புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க தேவன் எஸ்டேட், தேவர்சோலை, மேபீல்ட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் தனியாக நடமாட தடைசெய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்பரா வனப்பகுதிக்குள் கால்நடை மருத்துவக் குழு வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 19-வது நாளாக புலியை தேடும் பணி தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.