இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 187 நாடுகள் பங்குபெறும்
சதுரங்கப் போட்டியை தமிழக முதல்வர் சென்னையில் நடத்த உள்ளார் என
விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச FIDE சதுரங்கப் போட்டியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கிவைத்தார். 5 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் அமெரிக்க மற்றும் இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை சுமார் 350க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள்
கலந்துகொண்டு விளையாடினர். இந்நிகழ்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் நரேஷ் ஷர்மா, கல்லூரி முதல்வர் மற்றும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், வரலாற்று சிறப்பு வாய்ந்த 44வது சதுரங்க (செஸ்) ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாபெரும் சிறப்பு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக சென்னையில் இருக்கக் கூடிய கேசிஜி கல்லூரியில் சர்வதேச செஸ் போட்டியைத் துவக்கி வைத்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் போட்டிபோட்ட நிலையில், தமிழக முதல்வரின் முயற்சியால் 24 மணி நேரத்தில் செஸ் ஒலிம்பிக் போட்டி தமிழகத்தில் நடைபெற அனுமதி பெற்றார் என்று பெருமிதம் கொண்டார்.
இந்திய வரலாற்றில் இது வரைக்கும் 187 நாடுகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள்
நடந்ததாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட ஒரு சரித்திர நிகழ்வை தமிழக முதல்வர்
தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி பெற்றுத் தந்து அந்த செஸ் போட்டியை தலைமையேற்று நேரடியாகக் கண்காணித்து, செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
அதன் அடிப்படையில் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவங்கிவைத்த
ஒலிம்பிக் தீபத்தை இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மாநிலங்கள், யூனியன்
பிரதேசங்களைக் கடந்து வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்க இருக்கிறது.
இந்தியாவில் 74 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அதில் அதிகமானவர்கள்
தமிழ்நாட்டில் சென்னையில்தான் உள்ளார்கள். இந்தியாவில் செஸ்ஸின் தலைமையமாக சென்னை உள்ளது. இந்தப் போட்டி இங்கு நடைபெறுவது நமக்கு மகிச்சியைத் தருகிறது. அதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 227 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இதில், 135 நாடுகளுக்கும் மேலாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய விசாக்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து வருகை தர இருக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வீசா வழங்க வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 24 மற்றும் 25ஆம் தேதி குஜராத்தில் உள்ள நிவடியா என்ற பகுதியில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தைச் சார்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அதில் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து எடுத்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வரின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கொண்டு சென்றால்தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பொழுது மிகப்பெரிய வெற்றியை
பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு பல்கலைக்கழகம் ஒலிம்பிக் போட்டிகளில் 120 தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறது என்பது வரலாறு. அதன் அடிப்படையில் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் கொண்டு செல்வதுதான் தமிழக முதல்வரின் அடுத்த இலக்கு. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விளையாட்டு (PT) வகுப்புகள் இருந்தன. ஆனால், தற்போது இல்லை. மீண்டும் அதைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு இருக்கிறார் என்றார்.
-ம.பவித்ரா







