கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் படங்கள் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் வைக்கப்பட்ட விவகாரத்தால் இரு மதத்தவர்களிடையே பிரச்னை ஏற்பட்டது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுயில் வீர சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு கடந்த செவ்வாய் கிழமை கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமைய்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை பெற்றவர்தான் வீர சாவர்க்கர் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, குடகு பகுதியில் சித்தராமைய்யாவின் கார் மீது முட்டை வீசப்பட்டது. மேலும், தொலைபேசிமூலம் அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 9 பேர் குஷால்நகர் பகுதியிலும், 7 பேர் மடிகேரி பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐய்யப்பா தெரிவித்துள்ளார்.








