கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருகராஜேந்திர மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என ஆசீர்வதித்தார்.
கர்நாடாவில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதலமைச்சர் பொறுப்பு யாருக்கு என்பதில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் சித்தராமைய்யாவுக்கும் கட்சியின் மாநில தலைவர் சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனால், கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகா வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சித்தராமைய்யாவின் 75வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.
முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றுமாறு அவர் மூத்த தலைவர்களைக் கேட்டுக்கொண்டதாக் கூறப்படுகிறது.
இந்த பயணத்தின்போது சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அப்போது, மடத்தின் துறவிகள் அவரை வரவேற்றனர்.
அப்போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், ராகுல் காந்திக்கு திருநீறு அணிவித்து ஆசீர்வதித்தார். அப்போது, ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என அவர் ஆசீர்வதித்ததாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கான மடம் இது. கர்நாடகாவில் 17 சதவீதம் லிங்காயத்துகள் உள்ளனர். இவர்கள் வழக்கமாக பாஜகவையே ஆதரிப்பார்கள்.
இந்நிலையில், மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவரின் ஆசீர்வாதம் குறித்த தகவல் சர்ச்யை ஏற்படுத்தியதை அடுத்து விளக்கம் அளித்த மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருக ஷாரனரு, மடத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது வழக்கமானதுதான் என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி அமைத்தபோது லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்து தற்போது முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மையும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரே.
இந்நிலையில், லிங்காயத் சமூகத்தவர்களை ஈர்க்கும் நோக்கில் ராகுல் காந்தி லிங்காயத் மடத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.