அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்கிறார் திருமூலர். அவருடைய திருமந்திரத்தின் ஒரு பாடலை “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற பகுதியில் இன்று பார்ப்போம்.
“யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”. (திருமந்திரம் 252 ) 
பாடலின் விளக்கம் – மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றும் பசுவிற்கு ஒரு வாய் புல்லாவது கொடுங்கள் என்றம் சொல்கிறார் மகான் திருமூலர். நம்முடய மனதில் மற்ற உயிர்கள் மீது அருள் இல்லை எனில் எப்படி கடவுளுக்கு நம் மீது அருள் வரும்?. கொடும் சொற்களைப் பேசி மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையான வார்த்தைகளை பேசினாலே போதும் அதுவே கடவுளுக்கு பக்கமாக செல்லும் வழி என்றும் நான்காம் அடியில் சொல்லுகின்றார் மகான் திருமூலர். 
இறைவனை வணங்க பச்சிலை போதும்!
இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். விளம்பர பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்ய வேண்டியதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர். பகட்டல்ல; பற்றுதலும் பரிதவிப்புமே கணக்கில் வரும் என்பது திருமூலர் கருத்து.
-தங்கம்







