திருமண்டங்குடியிலுள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க கோரி 150-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே, திருமண்டங்குடியிலுள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.400 கோடி வழங்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலை மூடப்பட்டது. இந்த ஆலையை கால்ஸ் டிஸ்லரீஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஏலத்தில் எடுத்தது. இதனைதொடர்ந்து கரும்பு விவசாயிகள் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க கோரி நவம்பர் மாதம் 30-ம் தேதியிலிருந்து ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது போராட்டம் 150-வது நாளான நேற்று திருஆரூரான் சர்க்கரை ஆலை முன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
—அனகா காளமேகன்







