14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும், வரும் ஜூலை 6ஆம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.







