மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.06 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 93.56 டி.எம்.சியாகவும் இருந்தது.
அணைக்கான நீர்வரத்து 1,20,000 கன அடியிலிருந்து 1,21,000 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் தற்போது அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணி நிலவரப்படி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,20,000 கன அடியிலிருந்து 1,30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால், மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், 16 கண் பாலம் வழியாக 1,07,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் நிலையில் கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.060 அடியாகவும், நீர் இருப்பு 93.566 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1,30,000 கன அடியாக உள்ளதால், அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.








