12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக 2020-21 கல்வியாண்டில் நடக்க இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. இதையடுத்து மதிப்பெண்களை விகிதாச்சார அடிப்படையில் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
12-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20), அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30க்கு பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக 12ம் வகுப்பு செய்முறைத் தெர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 11,12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10,11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 35 விழுக்கபாடு மதிப்பெண் வழங்கப்படும். 11,12-ம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்கள் தனி தேர்வர்களாகத் கருதப்பட்டு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறி முறைகளில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31ம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.