சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்களை ஒழிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ஏற்கனவே தமிழக பிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய காவல் துறை அதிகாரிகள் மூலம் போதைப் பொருட்கள் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பல ஆயிரக்கணக்கான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா பொருட்களை கடத்திய நபர்கள் மற்றும் விற்பனை செய்கின்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கம்போல் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் தன்பாத் விரைவு ரயிலில் வந்த பயணியை சோதனை செய்தபோது அவரிடம் 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த நபரை விசாரணை செய்த ரயில்வே போலீசார் சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பதும், விஜயவாடாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக ரயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பி. ஜேம்ஸ் லிசா








