ஜூன் மாதத்திற்குள் 10,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஜூன் மாதத்திற்குள் 10,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கும்…

ஜூன் மாதத்திற்குள் 10,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

திமுக ஆட்சிக்கு பிறகு எத்தனையோ முத்திரையை பதிக்கும் திட்டங்கள் தீட்ட பட்டுள்ளது. புதுமைப் பெண்,  நான் முதல்வன் , மக்களை தேடி , மருத்துவம், ஒலிம்பிக் தங்கப்பதக்கம்,  உங்கள் பகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் என பல திட்டங்கள் திமுகவால் தீட்டப்பட்டுள்ளது.  மக்களிடம் செல், மக்களோடு மக்களுக்காக வாழ் என்பதுதான் கலைஞர் காட்டிய பாதை. நாங்கள் ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காக போராடுவோம்,  ஆட்சியில் இருக்கும் போது மக்களின் பயன்களை பூர்த்தி செய்வோம்.

களத்தில் சென்று பார்த்தபோது அரசின் தேவைகளை மக்கள் பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. அரசின் சேவைகள் எல்லாம் பொதுமக்களுக்கு எளிமையாக சேர விரும்பியதன் காரணம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் முதியோர் போன்றவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெருமளவில் பயன்பெற்றுள்ளனர். 30 நாட்களில் எங்களுடைய நடவடிக்கையின் மூலமாக 3,50,000 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்த மக்களிடம் முதல்வர் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக விளங்கும் மக்களுடன் முதல்வர் திட்டம்.  அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 60 ஆயிரத்து 560 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  வருகிற ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.