தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைபெறுவதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாருகாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிலத்தில் பணிகள் நடைபெற்றதாக புகார் தெரிவித்துள்ளார்.
அதில், தனி நபரின் விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பராமரிப்பது, போன்ற வேலைகளில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதனால், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தனியார் நிலத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வேலை செய்ததற்கான ஆதாரத்தை மனுதாரர் சமர்ப்பித்தார். அதை பார்த்து அதிருப்தியை வெளிபடுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க உத்தரவிட்டனர். மேலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







