“திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னுடன் பேசி வருகிறார்கள்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து திருவள்ளூரில் அவர் மேலும் கூறியதாவது:
பாசமுள்ள கட்சி அதிமுக. அன்போடு அழைத்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
தொண்டராக கலந்து கொண்டேன். திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக நடை பயணம் செய்கிறார்.
திமுக குடும்பக் கட்சி. கார்ப்பரேட் மாடல். இதுதான் திராவிட மாடல்.
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே; எந்த பதவியும் இல்லாத அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
வீடியோவாக காண – “திமுக ஆட்சியில் மேயர்களுக்கு மரியாதை இல்லை… திமுக கார்ப்பரேட் மாடல்”- EPS Pressmeet
தொண்டர்கள் மட்டும்தான் அதிமுக. மற்றவர்களுக்கு இடம் இல்லை. தொண்டர் என்ற முறையில் தான் இங்கு வந்துள்ளேன். அதிமுக அலுவலகத்தில் திருடு போன சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்த விசாரணை. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற முதலமைச்சரும் தமிழகத்தில் கிடையாது. நீதிமன்றத்திற்கு சென்ற பின்பு தான் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்கின்றனர்.
காவல் துறையினரின் மெத்தனப் போக்கு காரணமாக சிபிசிஐடி விசாரணை வந்துள்ளது. திமுக அரசு சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்குச் சான்று. அதிமுக அலுவலகத்தில் திருடு போனது குறித்து புகார் அளித்தும் விசாரணை முறையாக நடைபெறவில்லை. 
பசியும் பட்டினியுமாக உள்ள ஏழைகளுக்காக அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டது.
அதனை மூடியவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் பாதிக்கக் கூடாது. குடிநீர் பாதிக்கக் கூடாது.
அணை கட்டுவதை அரசு தடுக்க வேண்டும்.
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை பிரதமருக்கு எடுத்துச் சொல்லி கைது செய்யப்பட்டவர்களை அதிமுக அரசு மீட்டு வந்தது. படகுகளை மீட்டு கொண்டு வந்தோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.








