சென்னையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தையுமே திருப்பதி தேவஸ்தானம் தான் நிர்வகித்து வருகிறது. இதேபோன்று, சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான வெங்கடேசப்பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்குள்ள கோவிலில் தான் பெருமாளை நேரில் கண்டு தரிசனம் செய்வர். திருப்பதியை போன்றே இங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்படிப்பட்ட திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்காக, பழம்பெரும் நடிகை காஞ்சனா தனது குடும்பத்தினருக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் இருந்த 6 கிரவுண்ட் இடத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கினார். அந்த இடத்தில், பத்மாவதி தாயார் கோயிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் 10 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டாக கட்டியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோவில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் மண்டபம், மடப்பள்ளி, புஷ்கரணி , வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளன. கோயிலில் 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைநயமிக்க சிற்பங்களும், கருவறையின் எதிரே பலிபீடம் உள்ளது.
இந்நிலையில், கோயிலின் மகா கும்பாபிஷேகம் காலை 7.30 மணிக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக 3 நாட்கள் பத்மாவதி தாயாருக்கு நெல் தானியத்திலும், தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை தாயாரை கோவில் கருவறைக்கு கொண்டு சென்று அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்தி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் செய்யப்பட்டன.
வழக்கமாக வரும் கூட்டத்தை தாண்டி, கும்பாபிஷேகத்திற்கு என வரும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. . மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெஜ் பிரியாணி ஆகிய உணவு வகைகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக கோவிலுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழ்நாடு, புதுச்சேரி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.ஒய்.சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, உள்ளிட்ட ஆன்மீகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.