நாமக்கல் அடுத்த பொம்மை குட்டை மேட்டில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ351.11 கோடி மதிப்பிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூ23.70 மதிப்பீட்டில் 60 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து 1,03,321 பயனாளிகளுக்கு ரூ 303.36 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் இதுவரை 216 கோடி பயணங்கள் மேற்கொண்டு பயன் அடைந்து உள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை ஒரு கோடி மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளது.
புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1.25 இலட்சம் மாணவிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். தமிழக மக்களின் நலனை கருதி இன்னும் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் அறிவிப்பார்.
சட்ட பேரவை வளாகத்தில் உள்ள மாளிகைக்கு நாமக்கல் கவிஞர் பெயர் சூட்டி நாமக்கல் கவிஞருக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர். நாமக்கல் மாவட்ட மக்கள் கடுமையாக உழைக்க கூடியவர்கள். பல்வேறு தொழில்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு வரிகள் கட்டும் மக்கள். இது அனைவருக்குமான அரசு. திராவிட மாடல் அரசு. மக்களுக்காக உழைக்கின்ற அரசு. கலைஞரின் பேரன், முதல்வரின் மகன் என பெருமையாக இருந்தாலும் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பேன். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.