உடுமலை-மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள மூணாறுக்கு அமராவதி வனப்பகுதி வழியே தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அமராவதி வனச்சரகத்தில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது கூட்டமாக சாலையில் நின்று செல்வதும் வழக்கம். அந்தப் பகுதி வழியே வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், யானைகள் கூட்டம் சாலையை கடக்கும் வரை வாகனத்தை நிறுத்தி விட்டு, வேடிக்கை பார்த்து விட்டு செல்வார்கள்.
அதேபோல இன்று காலை அமராவதி அணை பகுதிக்கு வந்த ஒற்றை யானை சாலையின் நடுவே நீண்டநேரம் நின்றதால் வாகனங்கள் சாலையைக் கடக்க முடியவில்லை. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரத்திற்குப்பின் ஒற்றை யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.
வனத்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபட்டு யானைகள் சாலையில் செல்லாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







