கிறிஸ்தவர், இஸ்லாமியர் என யார் பாதிக்கப்பட்டாலும் பாஜக குரல் கொடுக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முன்னாள் அரசவை கவிஞர் முத்துலிங்கத்தின் மருந்தக திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளை எதிர்க்கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கூறினார். இந்து கடவுள்களை பற்றி சிலர் தவறாக பேசியதால் தான் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பாஜக மதரீதியான கட்சியல்ல என்ற அவர், எந்த மதத்தினர் பாதிக்கப்பட்டாலும் பாஜக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார். இறந்து போன தலைவர் பற்றி அவதூறாக, தனிப்பட்ட முறையில் பேசுவது அநாகரீகமான அரசியல் என்றும் அவர் கூறினார். ரஜினிகாந்தின் அரசியல் குறித்து 31ஆம் தேதி அவர் அறிவித்ததற்கு பிறகுதான் சொல்ல முடியும் என்றும் இல.கணேசன் கூறினார்.







