மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், 4 பேருக்கு தொற்று உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 22ஆம் தேதி பரிசோதனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிந்தது. கடந்த 2 நாட்களாக தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட ரஜினிகாந்துக்கு திடீரென ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால், அவர் உடனடியாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும், அவருக்கு ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளது. எனவே 24 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு நாளை நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.







