நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத்தில் மாதம் 200 ரூபாய் பிடித்தம் செய்யும் உத்தரவை எதிர்த்து தாம்பரம் நகராட்சி முன்னாள் ஆணையர் பழனி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் கோராமால் 83 ஆயிரத்து 920 ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொண்ட முன்னாள் ஆணையரின் ஓய்வூதியத்தில் 200 ரூபாய் பிடித்தம் செய்யும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதி வைத்தியநாதன், நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படியாமல் இருப்பது கடமை தவறுவதற்கு சமம் என குறிப்பிட்டார்.







