மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
நாளை மறுநாள் முதல், ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்த சான்றிதழ் மிகவும் அவசியம்.
இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 31ம் தேதி அதிகாலை முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த மாதம் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதற்கு அடுத்த நாள் ஜனவரி 20ம் தேதி கோயில் நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்காக பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை முதல் தொடங்கியது.
http://www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். இந்த மகர விளக்கு காலத்தில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை எல்லா நாட்களிலும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.







