பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றை ரயில் வடிவத்தில் மாற்றியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. அதனால் சில பள்ளிகளில் கட்டட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்றில் வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளி வகுப்பறைகளை ரயில் அமைப்பை போல் மாற்றியுள்ளனர். வகுப்பறையின் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் நிஜ ரயிலை போன்றே இருக்கின்றன. இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் பள்ளியின் பெயருக்கு அருகில் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரமும் குறிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆரம்பமாகும் நேரமான காலை 9:20 மணியை புறப்படும் நேரம் என்றும், பள்ளி முடியும் நேரமான மாலை 4:10 மணியை வந்து சேரும் நேரமாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசு நிதியுதவி பெறும் மானியத் தொடக்கப்பள்ளி 1949ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் விடுமுறை எடுக்காமல் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து செல்வார்கள்.