பெண்களை ஈவ் டீசிங் செய்ததை தட்டிக்கேட்டதால், தேங்காய் வியாபாரியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை-கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான அசாருதீன் என்ற இளைஞர், பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்கள் மீது இருசக்கர வாகனத்தை மோதுவது போல வந்து, ஈவ் டீசிங் செய்து வந்துள்ளார். பல நாட்களாக அசாருதீன் பெண்களுக்கு இப்படி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அசாருதனின் இந்த செயலை, பேருந்து நிலையத்தில் தேங்காய் கடை வைத்திருக்கும் சொர்ணக்காளை என்பவர் கவனித்துள்ளார்.
அதனால் இளைஞரின் செயல் தவறு எனக் கூறி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அசாருதீன், சொர்ணக்காளையை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த சொர்ணக்காளையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்த சம்வம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ராமநாதபுரம் அருகே தொண்டி பகுதியில் பதுங்கியிருந்த அசாருதீனை கைது செய்தனர்.







