கொரோனா தடுப்புமருந்து பாதுகாப்பானது என பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் முதல் தடுப்பு மருந்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் எடுத்துக்கொள்ளவுள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை அடுத்து அந்நாட்டு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று ஜூன் ஜூலை மாதங்களில் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே பிரிட்டன் அரசு கொண்டு வந்த ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீசத்தொடங்கியுள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 61,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே நோய் பரவலை தடுக்க தற்போது நல்ல முடிவை அளித்து வரும் அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பு மருந்தை இந்த வாரம் முதல் நாட்டு மக்களுக்கு வழங்க பிரிட்டன் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பெல்ஜியத்தில் இருந்து 8,00,000 டோஸ் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 4 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை ஃபைசர் நிறுவனத்திடம் பிரிட்டன் அரசு ஆர்டர் செய்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்களிடன் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் வகையில் பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வரவுள்ள தடுப்பு மருந்தை முதலாவதாக இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசெபத் எடுத்துக்கொள்ளவுள்ளார். 94 வயதான எலிசபெத் மகாராணி மற்றும் 99 வயதான இளவரசர் பிலிப் ஆகியோர் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றவர்களில் முதன்மையானவர்களாக இருப்பார்கள் இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.







