ஆட்சியின் சாதனைகளை தெரிவிப்பதற்கு பதிலாக வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் உரையை பிரதமர் மோடி சுதந்திர தின உரையின் போது பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசின் சாதனைகளை தெரிவிப்பதற்கு பதிலாக தெளிவற்ற வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் உரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார்.
மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட பேரழிவை பிரதமர் அரிதாகவே தெரிவித்தார். அதை நாட்டின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு பேசினார். மணிப்பூர் ஒரு போர்க்களமாக மாறுவதற்கு வழிவகுத்த மோசமான தோல்விக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் உரையில் பொய்கள் அதிகம் காணப்பட்டன.
கொரோனாவை இந்தியா திறமையாக கையாண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போதுமான ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் சரியான நேரத்தில் போதுமான தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய பிரதமர் தவறியதன் விளைவாக, இந்தியாவில் 40 லட்சம் பேர் உயிரிழந்தனர். உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரத்தின்படி இது உலகிலேயே அதிக பலி எண்ணிக்கை என்பதை பிரதமர் மோடி குறிப்பிடத்தவறி விட்டார்” என ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.







