பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி மாற்றுத்திறனாளி முதியவர், தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சேர்ந்த 56 வயதான நாகராஜ் என்பவருக்கு காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெற்று வரும் நாகராஜ், பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது இன்றுவரை அறியாமல் அவருக்கு வழங்கிய உதவி தொகையை சேமித்து வைத்து வந்துள்ளார். அதனை தனது மனைவிக்கு தெரியாமல் பத்திரப்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரது மனைவி பஞ்சவர்ணம் தனது கணவர் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக சுமார் 7 ஆயிரம் ரூபாயை கண்டறிந்துள்ளார்.
அவற்றை மாற்ற முயன்றும் முடியாததால் சேமித்து வைத்திருந்த பழைய ஆயிரம் ரூபாய் தாள்கள் மொத்தம் ஏழாயிரம் ரூபாயை மாற்றி தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் மாற்றுத்திறனாளியான நாகராஜுக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், அங்காள ஈஸ்வரி, கருப்பசாமி என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். அரசு தரும் உதவித் தொகையை வைத்துதான் தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றி வருவதாகவும், அதனால் தேனி மாவட்ட ஆட்சியர் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.







