கிருஷ்ணகிரி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்
இரண்டு கைகள் இல்லாத மாணவர் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவன் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறிய அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவரின் மகன்
க்ரித்தி வர்மா. நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் க்ரித்தி
வர்மா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில்
முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவன் க்ரித்தி வர்மாவிற்கு நான்கு வயது இருக்கும் பொழுது மின்சாரம்
தாக்கியதில் அவர் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். இந்த நிலையில்
தன்னம்பிக்கையுடன் படித்த க்ரித்தி வர்மா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக
மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார். இந்த செய்தி ஊடகங்களில்
வெளியான நிலையில் உடனடியாக அந்த மாணவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவனுக்கு வாழ்த்து கூறியதுடன் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக துணை பொது செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற
உறுப்பினருமான கே பி முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
அசோக்குமார் இருவரும் மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று மாணவன் க்ரித்தி
வர்மாவை வாழ்த்தினர். இதை தொடர்ந்து மாணவனுக்கு கல்வி ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்கள். மாணவனின் தாயாரிடம் பேசிய கேபி முனுசாமி தாங்கள் விரும்பும் எந்த பள்ளியில் வேண்டுமானாலும் மாணவனை சேர்த்துக் கொள்ளுமாறும் அதற்கு உண்டான கல்வி செலவு முழுவதையும் தான் ஏற்றுக்
கொள்வதாகவும் உறுதி அளித்தார்.







