தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 2ம் தேதி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதன்காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







