தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர், ஏழை, எளிய மக்களுக்காக அம்மா மினி கிளினிக் திறக்கப்படுவதாக கூறினார். தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, கிராமப்புற மக்களுக்காக நடமாடும் மருத்துவக் குழுவும் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், தான் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதால் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். மருத்துவப் படிப்பில் அடுத்த ஆண்டு 435 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.




