மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வித்துறை மன்ற வளாகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அப்போது, ட்ரோன்கள் மூலம் ஜெயலலிதாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உயர்கல்வித்துறை மன்ற வளாகம், அம்மா வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இந்தியாவில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர் பழனிசாமி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று கூறினார்.







