ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும், அயலகத் தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற
வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு
போட்டிக்கு தடை இல்லை எனவும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த கார்த்திகேய சிவ சேனாதிபதி, 2006 ஆம் ஆண்டு மதுரையில் துவங்கிய வழக்கு 2023 ஆம் ஆண்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக நிறைவடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதற்காக எத்தனையோ பேர் சட்டரீதியாக போராடி வந்ததாகவும்
அதில் தான் சிறிய அளவு பங்கு செலுத்தி இருப்பது தற்போது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும் 2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு க ஸ்டாலினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட விவரங்களை கேட்டு அதில் வெற்றி பெற தேவையான வாதங்களை முன்வைத்தது தற்போது தீர்ப்பு நமக்கு சாதகமாக காரணம் என்றும் இது தனக்கு மகிழ்ச்சியளிக்க கூடியதாகவும் தெரிவித்தார்.







