செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீர் நிரம்பியுள்ளது, அடுத்த 9 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் குடிநீர் வழங்கும் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்த நீர் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி ஆகும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்றைய நிலவரப்படி புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் 75 சதவீதத்தை கடந்து சென்ற நிலையில் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 8,965 மில்லியன் கன அடியாக உயா்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் மூலம் ஏரிகளில் 76.25% நீர் நிரம்பியுள்ளது. இது கடந்தாண்டை விட 18% அதிகமாகும். அதன்படி, 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் 32.40 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வருகிறது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கத்தில் 22.09 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரி நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே தேவைப்படும் நிலையில் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும், 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியின் நீர்மட்டம் நேற்று 35.59 அடியாக உள்ளது. அதாவது ஏரியின் நீர்மட்டம் 92% கடந்துள்ளது. எனவே இந்த ஏரியிலிருந்தும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று, 21.20 அடி நீர்மட்டம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 17.45 அடியாக இருந்தது. ஏரிக்கு வினாடிக்கு 270 கன அடி தண்ணீர் வருகிறது. 18.86 உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 12.21 அடி நீர் இருப்பு உள்ளது.
இதன் மூலம் சென்னைக்கு அடுத்த 9 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மாத இறுதியில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது ஏரிகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும், இதனால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி, அடையாறு, கொசஸ்தலையாறு, உள்ளிட்டவற்றில் உபரி நீர் திறக்கும் சூழ்நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.