சாதாரண வைரஸ் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் மூன்று மடங்கு ஆபத்தானது; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பருவ காலங்களில் வரும் சாதாரண வைரஸ் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் தொற்று மூன்று மடங்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம்…

பருவ காலங்களில் வரும் சாதாரண வைரஸ் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் தொற்று மூன்று மடங்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 16 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பருவ காலங்களில் வரும் சாதாரண வைரஸ் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் தொற்று மூன்று மடங்கு ஆபத்தானது என பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தி லான்செட் சுவாச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 89,530 நோயாளிகளின் தரவுகளையும் 2018 டிசம்பர் முதல் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 45,819 நோயாளிகளின் தரவுகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

இதில் பருவகால காய்ச்சலால் வெறும் 5.8% பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மட்டும் 16.9% பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பருவகால வைரஸ் காய்ச்சலுடன் ஒப்பிடும்போது 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply