சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை சில்லறை விற்பனை செய்வதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்யை விற்பனை செய்வதை உறுதி செய்ய கோரியும், மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தியும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி என்பவர், பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை சில்லறை விற்பனை செய்வதற்கு தடை விதித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். எண்ணெய் தரத்தை ஆய்வு செய்ய அரசு மற்றும் தனியார் ஆய்வங்கள் எத்தனை உள்ளது என்றும், 2011ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி சமையல் எண்ணெய் எவ்வாறு உதிரியாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
தரமற்ற எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.







