கர்நாடகாவில் சம்பளம் தராத நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே உள்ள நசபுராவில் Wistron Corporation என்ற நிறுவனம் உள்ளது. இது தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களும் அந்நிறுவனத்திடம் பலமுறை இதுபற்றி பேசியுள்ளனர். இறுதியில் எந்த தீர்வும் எட்டப்படாததால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கற்களை வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்த அவர்கள், நிறுவன பெயர் பலகை, வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தினர். நிர்வாகத்திற்கு எதிராக கண்டனக் குரல்களையும் எழுப்பினர். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கர்நாடக துணை முதல்வர் அஸ்வந்த் நாராயண் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், இந்த பிரச்சனையை வேறு வழியில் சரி செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.







