தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு செய்து தரக்கோரிய வழக்கில் நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மனு தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில், தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் காணொலி வாயிலாக ஆஜராக நேரிடும் என மதுரைக்கிளை எச்சரித்துள்ளது. காவலர்களுக்காக என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில் என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மற்ற துறையை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர், காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு காவல்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம், பிற மாநிலங்களில் காவல்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




