கல்லூரிகள் மூலமாக பரவத் தொடங்கும் கொரோனா: மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்…

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மூடப்பட்டது. இந்த சூழலில் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் செய்லபட அனுமதியளித்தது.

மேலும் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கவும், அதற்காகவும் கல்லூரிகள் திறக்கவும் தமிழக அரசு அனுமதியளித்தது. இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மெஸ் ஊழியர்கள் உட்பட மொத்தம் 183 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா பரவலால் ஐஐடியில் உள்ள உணவகம், விடுதி, நூலகம், மாணவர்கள் விடுதிகளை மூட அதிரடியாக ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் ஐஐடி வளாகத்தில் கட்டுப்படுகள் தீவிரப்படுத்தப்பட்டு பிற மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல சென்னை பல்கலைக்கழகத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் சூழலில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மாணவர்கள் கவனமாக செயல்பட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், ஐஐடி ஒரு பாடம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதன் எதிரொலியாக சென்னையில் அனைத்து கல்லூரிகளிள் விடுதிகளிலும் தங்கியிருக்கும் மாணவர்களிடையே 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அனைத்து விடுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அமைத்து மாணவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்பட உள்ளது. கல்லுரிகள் கொரோனா பரவல் மையமாக உருவெடுத்து விடுமோ என்று பெற்றோர்களும், மாணவர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply