“எனக்கு எதும் வேணாம்; எங்கூருல எல்லாருக்கும் கழிப்பறை கட்டிக் குடுங்க”- சிறுமியின் சொல்லால் சீரமைக்கப்பட்ட கிராமம்!

நாசா செல்லவிருக்கும் பள்ளி மாணவி ஒருவரால் ஒரு கிராமமே பயனடைந்துள்ளது பாராட்டை பெறும் வகையில் இருக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி வறுமையான குடும்பத்தில் பிறந்து தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படிக்கும் மாணவி.…

நாசா செல்லவிருக்கும் பள்ளி மாணவி ஒருவரால் ஒரு கிராமமே பயனடைந்துள்ளது பாராட்டை பெறும் வகையில் இருக்கிறது.

புதுக்கோட்டையை சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி வறுமையான குடும்பத்தில் பிறந்து தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படிக்கும் மாணவி. காலையில் வீட்டு வேலை முடித்து விட்டு பள்ளிக்கு செல்வது இவரது வழக்கம். வீட்டிற்கு வந்த பிறகும் மற்ற குழந்தைகளை போல இவரால் விளையாட முடியாது. மாலை நேரத்தில் கூலி வேலைக்கு சென்று இந்த சிறுவயதிலேயே தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஊரடங்கு நேரத்திலும் செலவுகளுக்காக தனது வேலையை தொடர்ந்து செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்போது 12வது படிக்கும் மாணவி ஜெயலட்சுமி நாசா செல்ல தயாராகி வருகிறார். தமிழ் வழியில் படித்து சர்வதேச தேர்வில் பங்கு பெற்று விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக நாசா செல்வதற்கான காலம் தள்ளிப் போயுள்ளது. இந்த ஆண்டு நாசா செல்ல வாய்ப்புள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். அவர் நாசாவுக்கு சென்று வருவதற்கு ரூ.1.69 லட்சம் தேவைப்பட்டுள்ளது. அவருக்கு நிறைய பேர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அதன்பிறகு கிராமாலயா என்ற தொண்டு நிறுவனம் மாணவியை தொடர்பு கொண்டுள்ளது. ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேட்குமாறு கூறியுள்ளனர்.

அப்போது மாணவி தன்னை பற்றியும், தனது குடும்பத்தினரையும் பற்றி மட்டும் சிந்திக்காமல் தனது கிராமத்தை பற்றியே நினைத்துள்ளார். தங்கள் பகுதியில் இருக்கும் 126 வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தருமாறு கேட்டுள்ளார். அவரது கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்த அந்த நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. தற்போது ஜெயலட்சுமி குடியிருக்கும் பகுதியில் உள்ள 126 வீடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்ததாகவும், ஒரு பெண்ணாக தனக்கு அந்த சிரமம் புரிந்ததாகவும் மாணவி கூறியுள்ளார். அதனால் மற்றவர்களும் அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து அனைவருக்காகவும் இந்த உதவியை கேட்டதாக கூறியுள்ளார். அவருக்கு ஊர் மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply