திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நெடுஞ்சாலை ஓரம் மற்றும் ஏரி பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி பகுதியில் 50.000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆரணி நகராட்சி எல்லையான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளான ஊசிகள் ,காலி மருந்து பாட்டில்கள், காலாவதியான மருந்துகள் மற்றும் ரத்தகரை படிந்த பஞ்சுகள் போன்றவை கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் ஆரணி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஆட்டு இறைச்சி கடைகளில் உள்ள ஆட்டு இறைச்சி கழிவுகளையும் நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை தொடர்ந்து ஆரணி நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகளும் கலக்கப்பட்டு வருவதாகவும் இதனால் குடிநீர் மாசு படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
—கோ.சிவசங்கரன்







