12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ZyCov-D என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பு இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ZyCov-D தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் அடிப்படையில், ZyCov-D தடுப்பூசி திருப்திகரமான செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தடுப்பூசி ஆய்வு வல்லுநர் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ZyCov-D தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பங்கேற்போர், தங்கள் தடுப்பூசியின் திறனை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறுகையில், 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் வரும் செப்டம்மாதம் தொடங்கும். எனினும், இந்த தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்காக அனுமதி சில வாரங்களில் வழங்கப்பட உள்ளது,” என்று கூறினார்.







