அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை உணவு டெலிவரி செய்யும் ஸ்சுவிகி ஊழியர் தனது நண்பர்களுடன் இணைந்து, தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 503 குடியிருப்புகள் உள்ளது.இங்கு ஒடிசாவை சேர்ந்த பிரதீப்குமார் ராவத் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இங்குள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்வதற்காக ஸ்சுவிகி ஊழியர் நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட் சரிவர இயங்காமல் கோளாறு ஆனதால் லிப்டில் உள்ள எமர்ஜன்சியை ஸ்சுவிகி ஊழியர் அழுத்தியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் நீண்ட நேரத்திற்கு பிறகே காவலாளி பிரதீப்குமார் சென்று ஸ்சுவிகி ஊழியரை வெளியே வரவழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்சுவிகி ஊழியர், அவரது நண்பர்கள் மூன்று பேரை அழைத்து வந்து காவலாளி பிரதீப்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த காட்சிகள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ஸ்சுவிகி ஊழியர் காவலாளியை தாக்கியதால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று ஸ்சுவிகி டெலிவரி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்