உணவு டெலிவரி செய்யும் இளைஞர் அவரது பிறந்தநாளிற்கு உணவு பார்சலில் சாக்லேட்டினை இணைத்து விநியோகம் செய்துள்ளார். இதனை கண்டு சொமோட்டோ நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் கேக்கினை பரிசாக அளித்துள்ளனர்.
எல்லோருமே தங்களது பிறந்தநாளை சிறப்புக்குரிய நாளாக கொண்டாடுவதுண்டு . அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருப்பது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
கரண் ஆப்தே என்ற ஜொமோட்டோ நிறுவன ஊழியர் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதை வித்தியாசமாக கொண்டாடுவதற்காக திட்டமிட்ட அவர் முதலில் தனக்கு ஒரு புதிய சட்டையை எடுத்துக் கொண்டார். பின்னர் அன்றைய தினம், தான் விநியோகம் செய்த ஒவ்வொரு ஆர்டரின்போதும் வாடிக்கையாளர்களுக்கு சாக்லெட் இணைத்து கொடுத்து பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாக பரவிய நிலையில், சில பயனர்கள் ஜொமோட்டோவை டேக் செய்து கரண் ஆப்தே பிறந்த நாளை கொண்டாடி அவருக்கு பரிசு வழங்குமாறு வலியுறுத்தினர். இதைப் பார்த்த சொமோட்டோ நிறுவனத்தினர், கரண் ஆப்தேவுக்கு பிறந்தநாள் கேக்கை அனுப்பி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். சொமோட்டோவின் இந்த செயலையும் கரண் ஆப்தே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேட்பரி நிறுவனமும் அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வகையில் சாக்லேட்களை பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.









