தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், தற்போது மிளகாய் விலையும் உயர்ந்து கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்திலே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட் ஆன மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் தென் மாவட்டங்களான தேனி, விருதுநகர் ,சிவகங்கை, திண்டுக்கல் போன்ற மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை இங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்து சந்தைப்படுத்துவார்கள்.
திடீரென்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்கறி வரத்து குறைந்து அனைத்து காய்கறிகளின் விளையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் திடீரென்று தக்காளி மற்றும் பச்சை மிளகாயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மிளகாய், தக்காளி ,இஞ்சி , சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விளைச்சல் குறைவாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாலும், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக சமையலுக்கு பிரதானமாக பயன்படுத்த கூடிய பச்சை மிளகாயின் விலை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.பச்சை மிளகாய் கிலோ கடந்த வாரத்தில் 80 முதல் 120ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதேபோன்று இஞ்சி கிலோ 220ரூபாய்க்கும், தக்காளி விலை கிலோ 110 முதல் 120ரூபாய் வரைக்கும், கொத்தமல்லி கிலோ – 80ரூபாய் க்கும், சின்ன வெங்காயம் -90ரூபாய்க்கும் பீன்ஸ் – கிலோ 100ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.மேலும் மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு பொதுமக்களின் வருகை குறைவாக காணப்படுகிறது.
தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இறக்குமதி செய்யக்கூடிய பகுதியான ஆந்திரா பாவூர்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து வழக்கமாக வரக்கூடிய காய்கறிகளின்வரத்து குறைவு மற்றும் மழையின் காரணமாக இந்த விலை ஏற்றம் அடைந்துள்ளதாகவும், இந்த விலை ஏற்றம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்வும்வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








