குரோம்பேட்டையில் தனது காதலியை திருமணம் செய்து வைக்கக் கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி உயிரிழக்க போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. காதலியை நேரடியாக அழைத்து வந்ததால் சமாதானம் ஆன வாலிபர் கீழே இறங்கினார்.
சென்னை குரோம்பேட்டை அடுத்த ராதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (19). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். கிஷோர் அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்யும்படி தனது காதலியிடம் கூறியதாகவும் அதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததால் இன்று காலை 8 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள 50 அடி உயரம் கொண்ட உயர்மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி காதலியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உயிரிழப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக மின் வாரியத்திற்க்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பைத் துண்டித்தனர். மேலும், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சென்ற போலீஸார் இரண்டு மணி நேரம் பெற்றோர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் கிஷோர் செவி சாய்காததால், அவரின் காதலியை நேரடியாக அழைத்து வந்து திருமணம் செய்வதாக உறுதி அழைத்த பின்னர் கிஷோர் உயர்மின் அழுத்த கோபுரத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர், இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் கிஷோரிடம் விசாரனை செய்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








